Showing posts with label Chidambaram. Show all posts
Showing posts with label Chidambaram. Show all posts

02 April 2018

சம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு

சம்பா சாதம் - கொத்ஸு.



சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100 - 150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள எல்லா தீக்ஷிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஸ்வாமி பிரசாதம் என்பதை தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸுவும் மிக மிக ருசியாக இருக்கிறது.

போன வாரம் 19 ஜூன் 2013 அன்று நான் சிதம்பரம் கோயிலில் இதை சாப்பிட்டேன். செய்முறையை தீக்ஷிதர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இதோ செய்முறை:

சம்பா சாதம் (மிளகு சாதம்) :


சம்பா சாதம்

தேவையானவை

1 டேபிள்ஸ்பூன்   மிளகு
1/2 டேபிள் ஸ்பூன்  ஜீரகம்
2 டேபிள்ஸ்பூன்     நெய்
200 கிராம் அரிசி
10 முந்திரி பருப்பு உடைத்தது, நெய்யில் வறுத்தது.
உப்பு

செய்முறை:

அரிசியை நன்கு அலம்பி, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் சமைத்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.
மிளகு, ஜீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
சாதத்தில் நெய் விட்டு, மிளகு, ஜீரகம் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிடவும்.


சம்பா சாதம் + கொத்ஸு



கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் --- 250 கிராம்.
புளி --- ஒரு எலுமிச்சை அளவு.
மஞ்சள் பொடி -- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை -- கொஞ்சம்
கொத்ஸு பொடி --- 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது)
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு --- 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) --- 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு.
 

கொத்ஸுப் பொடி:

கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்.

கொத்தமல்லி விதை --- 3 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் -- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  -- 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
சிகப்பு வர மிளகாய் --- 5

ஒரு வாணலியில் மேலே எழுதியவைகளை ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:


கத்தரிக்காய் வதங்குகிறது.

ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு) போடவும். கறிவேப்பிலை போடவும்.

கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.

இதற்கிடையே, ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். (concentrated).
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையை கூட்டவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.


கத்தரிக்காய் கொத்ஸு.

ராஜப்பா
22-06-2013



15 November 2017

திருவாதிரை களி, கூட்டு

பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை (சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது நடந்தது ஒரு மார்கழி மாஸம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.

இந்த வருஷம் [2012] திருவாதிரை பண்டிகை ஜனவரி 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. களியும் கூட்டும் செய்து நடராஜனுக்கு நிவேதனம் செய்து, கோயிலுக்குப் போய் நடராஜனை சேவித்து, அவனது அருளாசிகளைப் பெறுவோம்.

முதலில் திருவாதிரை களி செய்முறை பார்ப்போம்:

பச்சரிசி --- 250 கிராம் 
பாசிப்பருப்பு --- 100 கி (பயத்தம்பருப்பு)

முந்திரி --- 10
நெய் ---- 3 டீஸ்பூன்
ஏலக்காய் --- 3
தேங்காய் (துருவியது) ---- 1 மூடி [நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம்]
வெல்லம் ---- 350 கிராம்

அரிசியை நன்கு அலம்பி, களைந்து உலர்த்திக் கொள்ளவும்.

அரிசியையும் பயத்தம்பருப்பையும் தனித்தனியே சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, இரண்டரை தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதி வரும்போது உடைத்த அரிசி-பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக தூவினாற்போல போடவும் - கட்டி தட்டி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

முக்கால் பதம் வெந்ததும் சிறிது நெய், தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். [தேங்காய் வேண்டாதவர்கள் நெய் மட்டும் சேர்க்கவும்]

மேலும் 10 நிமிஷங்கள் இளம் சூட்டில் (SIMMER) வைத்து கிண்டி, நன்கு வெந்தவுடன் இறக்கிவிடவும்.

மீதி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, ஏலக்காயை பொடித்து களியில் போட்டு கிளறி விடவும்.

திருவாதிரைக் களி தயார் .. ஏழுகறி கூட்டுடன் சேர்த்து சாப்பிடவும்.

அடுத்து, ஏழு-கறி கூட்டு ::

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு - ஒவ்வொன்றும் 100 கிராம். [தோலுரித்துக் கொள்ளவும்]

வாழைக்காய் - ஒரு பாதி; பூசணி, பரங்கிக்காய், ஒவ்வொன்றும் ஒரு சிறு பத்தை

அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்.,

மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை, கொத்துக்கடலை (முதல் நாளே ஊறவைத்துக் கொள்ளவும்) (ஒவ்வொன்றும் 1/2 கைப்பிடியளவு)

கறிவேப்பிலை

துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்
புளி ---- எலுமிச்சம் பழ அளவு.
சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்
உப்பு,

அரைத்துக் கொள்ள --

தனியா 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -- 8 - 10
தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.

சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.

காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.

உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.

5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.

எழுகறி கூட்டு தயார்.

திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்.

ராஜப்பா
மாலை 5-45
6-1-2012

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...