02 April 2018

சம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு

சம்பா சாதம் - கொத்ஸு.



சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100 - 150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள எல்லா தீக்ஷிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஸ்வாமி பிரசாதம் என்பதை தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸுவும் மிக மிக ருசியாக இருக்கிறது.

போன வாரம் 19 ஜூன் 2013 அன்று நான் சிதம்பரம் கோயிலில் இதை சாப்பிட்டேன். செய்முறையை தீக்ஷிதர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இதோ செய்முறை:

சம்பா சாதம் (மிளகு சாதம்) :


சம்பா சாதம்

தேவையானவை

1 டேபிள்ஸ்பூன்   மிளகு
1/2 டேபிள் ஸ்பூன்  ஜீரகம்
2 டேபிள்ஸ்பூன்     நெய்
200 கிராம் அரிசி
10 முந்திரி பருப்பு உடைத்தது, நெய்யில் வறுத்தது.
உப்பு

செய்முறை:

அரிசியை நன்கு அலம்பி, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் சமைத்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.
மிளகு, ஜீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
சாதத்தில் நெய் விட்டு, மிளகு, ஜீரகம் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிடவும்.


சம்பா சாதம் + கொத்ஸு



கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் --- 250 கிராம்.
புளி --- ஒரு எலுமிச்சை அளவு.
மஞ்சள் பொடி -- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை -- கொஞ்சம்
கொத்ஸு பொடி --- 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது)
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு --- 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) --- 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு.
 

கொத்ஸுப் பொடி:

கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்.

கொத்தமல்லி விதை --- 3 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் -- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  -- 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
சிகப்பு வர மிளகாய் --- 5

ஒரு வாணலியில் மேலே எழுதியவைகளை ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:


கத்தரிக்காய் வதங்குகிறது.

ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு) போடவும். கறிவேப்பிலை போடவும்.

கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.

இதற்கிடையே, ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். (concentrated).
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையை கூட்டவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.


கத்தரிக்காய் கொத்ஸு.

ராஜப்பா
22-06-2013



No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...