01 October 2017

Cauliflower Green Peas Kuruma

காலிஃப்ளவர் - பட்டாணி குருமா

நேற்று இரவு சப்பாத்தி செய்ய எண்ணினோம். சேர்த்து சாப்பிட குருமா பண்ணலாம் என நான் சொன்னேன்; குருமாவை நானே பண்ணுவதாகவும் சொன்னேன்.

முதலில், இரண்டு உருளைக்கிழங்குகளை (மீடியம் சைஸ்) தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கினேன். அடுத்து, ஒரு நூல்கோலை இதேபோன்று தோல் சீவி துண்டங்களாக நறுக்கிக் கொண்டேன். 7,8 பீன்ஸ்களையும் நறுக்கினேன். புதிய பச்சைப் பட்டாணிகளை தோல் உரித்து ஒரு 3/4 கப் அளவிற்கு எடுத்துக் கொண்டேன். காலிஃப்ளவர் (சிறியது) எடுத்து நறுக்கி, தனியாக இன்னொரு பாத்திரத்தில் உப்பு சேர்த்த தண்ணீரில் ஃப்ளவர் பூக்களை போட்டேன்.

காலிஃப்ளவர், பட்டாணி தவிர்த்து மற்ற காய்களை மிதமான் தீயில் வேக விட்டேன். ஒரு கொதி வந்ததும், சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டேன். காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...

பெரிய வெங்காயம் (இரண்டு) தோல் உரித்து, பொடியாக நறுக்கினேன். 10 பூண்டு உரித்துக் கொண்டேன். சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டேன். ஒரு மீடியம் சைஸ் தக்காளியை எட்டாக நறுக்கினேன். இவற்றை மிக்ஸியில் போட்டு, இரண்டு டீஸ்பூன் தனியா தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த் தூள், கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கொத்தமல்லி தழை, ஒரு சிறிய கரண்டி தயிர் ஆகியவற்றையும் போட்டு, விழுதாக அரைத்துக் கொண்டேன்.

காய்கள் பாதி வெந்தவுடன், அவற்றோடு காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து மீண்டும் வேக விட்டேன். (ஃப்ளவரும் பட்டாணியும் சீக்கிரமே வெந்து விடுமாதலால் இவ்வாறு செய்தேன்). காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...

ஒரு பெரிய வாணலியில், 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் எட்டு கிராம்புகளையும் ஒரு ஏலக்காயையும் பொடித்து, ஒரு பட்டையை ஒடித்து போட்டு இரண்டு நிமிஷங்கள் பொரித்தேன். பின்னர் அரைத்த விழுதை போட்டு, 15 கிராம் வெண்ணெய் சேர்த்து, நன்கு வதக்கினேன்; பச்சை வாசனை போக வேண்டும். பத்து நிமிஷங்கள் வதக்கியவுடன், விழுது அரைத்த மிக்ஸி பாத்திரத்தை அலம்பிய தண்ணீரை இதில் ஊற்றி கொதிக்க விட்டேன். இன்னும் ஆறு நிமிஷங்கள்.

வெந்த காய்களை இதில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு, 7-8 நிமிஷங்கள் கொதிக்க விட்டேன். அடுப்பை அணைக்கும் போது சுடச்சுட புல்கா சப்பாத்திகள் ரெடியாக இருந்தன (விஜயா).

பின்னர் என்ன, உணவு மேஜையில் 5 பேரும் ஆஜர்; இரவு உணவு ஆரம்பித்தது, மணத்தோடும் ருசியோடும்.

ராஜப்பா
8-12-2011
11:30 AM

இது போல விழுது அரைக்காமல், கிராம்பு, ஏலக்காய், பட்டை பொடித்து,சோம்பு கொஞ்சம் போட்டு, எண்ணெயில் பொரித்து, அதே எண்ணெயில் வெங்காயம், ready-made பூண்டு-இஞ்சி விழுது, தக்காளி இவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு, பட்டாணி மட்டும் போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு, உருளை-பட்டாணி GRAVY மூன்று நாட்களுக்கு முன்னால் செய்தேன். சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள.

இங்கு பட்டாணி மிக மலிவாக கிலோ 40.00 விற்கு கிடைக்கிறது, எனவே எல்லாம் “பட்டாணி” சமையல் குறிப்புகள்.

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...